2 முறை பாம்பை கடிக்க வைத்து தந்தை கொலை: பணத்திற்காக மகன்கள் நடத்திய நாடகம்

திருவள்ளூர்: டிசம்பர் 20-
திருவள்ளூர் அருகே, காப்பீட்டு பணம் பெறுவதற்காக, அவரது மகன்களே ‘கட்டுவிரியன்’ பாம்பை விட்டு கடிக்க வைத்து, தந்தையை கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது. இது தொடர்பாக, இரு மகன்கள் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் கணேசன், 56. இவர், பொதட்டூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த அக்., 22ல், அவரது வீட்டு குளியலறையில் பாம்பு கடித்து இறந்து கிடந்தார். பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், கணேசனின் மகன்கள் மோகன்ராஜ், அரிஹரன் ஆகியோர், இரு காப்பீட்டு நிறுவனங்களில் தந்தையின் பெயரில் காப்பீடு செய்யப்பட்டிருந்த பணத்தை கோரி விண்ணப்பித்தனர்.
கணேசனின் மரணம் குறித்து விசாரணையில் ஈடுபட்ட காப்பீட்டு நிறுவனம், அவரது மரணம் குறித்து சந்தேகம் அடைந்தது. இதுகுறித்து, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க்கிடம் புகார் தெரிவித்தது. இதையடுத்து, திருவள்ளூர் எஸ்.பி., விவேகானந்தா சுக்லா உத்தரவின்படி, கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., ஜெயஸ்ரீ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வந்தது.
விசாரணையில், கணேசனின் மகன்கள் மோகன்ராஜ், அரிஹரன் இருவரும் இணைந்து, தந்தையை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொன்றது தெரியவந்துள்ளது. இது குறித்து, போலீசார் கூறியதாவது: கணேசன் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களில், 2.50 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்துள்ளார். குடும்பம் கடனில் சிக்கியுள்ளது. இதனால், தந்தையை கொலை செய்து, அதை இயற்கை மரணமாக நம்ப வைத்து, காப்பீட்டு தொகையை பெற்று, கடன்களை அடைக்க மகன்கள் திட்டமிட்டுள்ளனர். மூன்று மாதங்களுக்கு முன், தந்தை கணேசனை நல்ல பாம்பை வைத்து கடிக்க வைத்துள்ளனர். அதில், அவர் இறக்கவில்லை. இதையடுத்து, அதைவிட கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை வைத்து கடிக்க வைக்க முடிவு செய்தனர். இதற்காக, அரக்கோணம் அடுத்த மணவூரைச் சேர்ந்த பாலாஜி, 28, பிரசாந்த், 35, திருத்தணி தினகரன், 45, நவீன்குமார், 28, ஆகியோர் உதவியுடன், கட்டுவிரியன் பாம்பை, கடந்த அக்., 21ல் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். கணேசன் துாங்கிக் கொண்டிருந்தபோது, அவரது கழுத்தில் பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்துள்ளனர். ஆனால், குளியலறையில் பாம்பு கடித்து இறந்ததாக நாடகமாடி, அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்துள்ளனர். இதையடுத்து, கணேசனின் இரு மகன்கள் உள்ளிட்ட ஆறு பேரையும் நேற்று கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளோம். இவ்வாறு போலீசார் கூறினர்.