
புதுடெல்லி: ஜனவரி 23-
வால்மீகி ராமாயணத்தின் 233 ஆண்டுகள் பழமையான அரிய சம்ஸ்கிருத கையெழுத்துப் பிரதி அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராம்கதா அருங்காட்சியகத்துக்காக ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
வால்மீகி ராமாயணத்தின் கையெழுத்துப் பிரதி, டெல்லி சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் வசம் உள்ளது. டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இது பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. இந்தக் கையெழுத்துப் பிரதி, ஆதி கவியாகக் கருதப்படும் வால்மீகி ராமாயணத்துக்கு தத்துவ தீபிகா உரையுடன் கூடியது. இது, தேவநாகரி எழுத்துகளின் வடிவில் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டது ஆகும்.இந்தப் பிரதியானது அயோத்தியில் அமைக்கப்பட்டு வரும் ராம்கதா அருங்காட்சியகத்துக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.
இதை ராம்கதா அருங்காட்சியக நிர்வாகத்துக்கு தலைவராக உள்ள அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்திர மிஸ்ராவிடம் சம்ஸ்கிருதப் பல்கலைகழக துணைவேந்தர் ஸ்ரீனிவாசா வரகேடி நேற்று ஒப்படைத்தார்.இது குறித்து மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்த நிகழ்வு, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சாரப் பரிமாற்றமாகும்.
இந்தப் பிரதி, மகேஸ்வர தீர்த்தரின் செவ்வியல் உரையுடன் கூடியது. இது விக்ரம சம்வத் 1849 (கி.பி.1792) ஆம் ஆண்டைச் சேர்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படைப்பாகும். இது ராமாயணத்தின் அரிதாகப் பாதுகாக்கப்பட்டுள்ள ஒரு நூலியல் மரபைப் பிரதிபலிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சம்ஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீனிவாசா வரகேடி கூறுகையில், இந்த கையெழுத்துப் பிரதி, இனி அயோத்தியின் சர்வதேச ராம்கதா அருங்காட்சியகத்தில் நிரந்தரமாக இடம்பெறும். இது பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஆன்மிக விருந்தாக அமையும்” என்றார்.











