
புதுடெல்லி: ஜூலை.5-
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 நாடுகளை எதிர்கொண்டோம் என்று இந்திய ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த ஃபிக்கி நிகழ்ச்சியில் இந்திய ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசியதாவது:
பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை அழிக்க முடிவு செய்யப்பட்டது. முதலில் 21 தீவிரவாத முகாம்கள் அடையாளம் காணப்பட்டன. கடைசி நேரத்தில் 9 முக்கிய தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த முகாம்கள் துல்லிய தாக்குதல்கள் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டன.
இதன்பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் போர் நடைபெற்றது. நமக்கு ஓர் எல்லை. ஆனால் நமது எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 நாடுகளை எதிர்கொண்டோம். பாகிஸ்தான் முன்வரிசையில் இருந்தது. அந்த நாட்டுக்கு பின்னால் சீனா இருந்தது. பாகிஸ்தானுக்கு தேவையான அனைத்து ராணுவ உதவிகளையும் சீனா வாரி வழங்கியது.
கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தான் ராணுவத்துக்கு சீனா அதிநவீன ஆயுதங்களை விநியோகம் வருகிறது. தற்போது பாகிஸ்தான் பயன்படுத்தும் ஆயுதங்களில் 81 சதவீதம் சீன தயாரிப்பு ஆயுதங்கள் ஆகும். போரின்போது பாகிஸ்தான் ராணுவத்தின் மூலம் சீன ஆயுதங்கள் சோதித்து பார்க்கப்பட்டன. சுருக்கமாக சொல்வதென்றால், (சீனாவிடமிருந்து) கடன் வாங்கிய கத்தி மூலம் இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சி செய்தது.
இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தின் டிஜிஎம்ஓ அதிகாரிகள் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் இந்திய படைகள் எங்கெல்லாம் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது என்பது குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு சீனா வழங்கி கொண்டிருந்தது. போரின்போது இந்தியா சார்ந்த உளவு தகவல்களை, பாகிஸ்தானுக்கு சீனாவே வழங்கியது.
மேலும், பாகிஸ்தான் ராணுவத்துக்கு நூற்றுக்கணக்கான ட்ரோன்களை துருக்கி வாரி வழங்கியது. இந்த ட்ரோன்கள் இந்தியாவுக்கு எதிரான வான்வழித் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டன. ஒரே நேரத்தில் பலமுனை தாக்குதல்களை எதிர்கொண்டோம். ஆனால் எதிரிகளின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியாவின் முப்படைகளும் இணைந்து வெற்றிகரமாக முறியடித்தன.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை, நமக்கு பல்வேறு படிப்பினைகளை கற்றுத் தந்திருக்கிறது. இந்திய வான் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும். குறிப்பாக ட்ரோன்கள், ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிக்கும் திறனை மேலும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.