
லண்டன், ஜூலை 10- இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (10-ம் தேதி) தொடங்குகிறது.ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் லீட்ஸில் நடை பெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதன் மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என சம நிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. எட்ஜ்பாஸ்டன் போட்டியில் இங்கிலாந்து அணியின் பாஸ்பால் அணுகுமுறைக்கு இந்திய அணி பதிலடி கொடுத்து வெற்றி கண்டிருந்தது. பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் 269 ரன்கள் வேட்டையாடிய ஷுப்மன் கில், 2-வது இன்னிங்ஸில் 161 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தார். ஒட்டுமொத்தமாக 4 இன்னிங்ஸ்களில் 585 ரன்கள் வேட்டையாடி உள்ள ஷுப்மன் கில்லிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரும் சிறந்த பார்மில் உள்ளனர். கருண் நாயர் மட்டுமே இதுவரை அரை சதத்தை கூட எட்ட முடியாமல் தடுமாறி வருகிறார். அவரும் பார்முக்கு திரும்பும் பட்சத்தில் அணியின் பேட்டிங் மேலும் வலுப்பெறும். எட்ஜ்பாஸ்டன் போட்டியில் ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர். நித்திஷ் குமார் ரெட்டி மட்டுமே ஏமாற்றம் அளித்திருந்தார். வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் ஆகாஷ் தீப் இரு இன்னிங்ஸிலும் கூட்டாக 10 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.