
சேலம்: ஏப்ரல் 27 –
நாடு முழுவதும் 3.50 கோடி குற்றவியல் வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.
விசாரணை நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கமடையாமல் இருக்க வழக்கறிஞர்களும் நீதிமன்றமும் அரசும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ரூ.59.43 கோடியில் கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், இளந்திரையன், ஜெயச்சந்திரன், குமரப்பன் பங்கேற்றனர்.
விழாவில், உயர் நீதிமன்றதலைமை நீதிபதி தர்மாதிகாரி பேசும்போது, நீதித்துறையும் அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் மக்களின் பாதுகாப்பு கேடயமாகத் திகழ்கிறது. நீதித்துறை அதிகாரம் மற்றும் செல்வாக்கு போன்றவற்றுக்கு பணியாமல் நீதியை நிலைநாட்டி வருகிறது.
நீதியின் மாண்பை போற்றும் வகையில், நீதி பரிபாலனம் அமைய வேண்டும் என்றார். புதிய நீதிமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது: நாடு முழுவதும் 4.81 கோடி வழக்குகள் தேங்கியுள்ளன.
அவற்றில் 4.18 கோடி வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் உள்ளன. இந்த வழக்குகளில் குற்றவியல் வழக்குகள் மட்டும் 3.50 கோடியாகும்.
குற்றவியல் வழக்குகள் குறைந்திருக்க வேண்டும். உரிமையியல் வழக்குகள் அதிகமாக இருக்க வேண்டும். குற்றவியல் வழக்குகளில், 7 ஆண்டுகள் தண்டனை வழங்கக் கூடிய வழக்குகள் எண்ணிக்கை மட்டும் 2.50 கோடி.விசாரணை நீதிமன்றங்களில் மட்டும் 2.25 கோடி வழக்குகள் தேங்கியுள்ளன. இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவித்தபோது, கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் மாநில அரசு, வழக்கறிஞர்கள், நீதித்துறை இணைந்து கமிட்டி அமைக்கப்பட்டது. வழக்குகள் தேக்கமடையாமல் இருக்க வழக்கறிஞர்களும் நீதிமன்றமும் அரசும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகும்.



















