புதுடெல்லி: டிசம்பர் 24 கடந்த ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணி வழங்கப்பட்டிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இதன்மூலம் மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் வரை 7 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்ட ரோஜ்கர் மேளாவில் ஒரு லட்சம் பேருக்கு அரசு பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்றார். புதிய அரசு பதவியேற்ற பிறகு கடந்த அக்டோபரில் 13-வது ரோஜ்கர் மேளா நடத்தப்பட்டது. அப்போது 51,000 பேருக்கு மத்திய அரசு பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
இதன்தொடர்ச்சியாக 14-வது ரோஜ்கர் மேளா நேற்று நடைபெற்றது. அப்போது நாடு முழுவதும் 71,000 பேருக்கு மத்திய அரசு பணிக்கான ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. உங்களது கடின உழைப்புக்கு பலன் கிடைத்திருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், சுமார் 10 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டு, புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது. புதிய அரசு ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடனும், நேர்மையுடனும் நாட்டுக்கு சேவையாற்றி வருகின்றனர்.
மத்திய அரசு பெண்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக லட்சாதிபதி சகோதரி திட்டம் வெற்றிகரமாக அமல் செய்யப்பட்டிருக்கிறது. மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. முத்ரா யோஜ்னா திட்டத்தில் பெண்களுக்கு தொழில் கடன் வழங்கப்படுகிறது. பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு பள்ளிகளில் மாணவிகளுக்காக தனி கழிப்பறைகள் இல்லாததால் அவர்கள் பாதிப்பை பாதியில் கைவிடும் நிலை இருந்தது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவிகளுக்காக தனி கழிப்பறைகள் கட்டப்பட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. நாடு முழுவதும் 30 கோடி பெண்களுக்கு ஜன் தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் மத்திய அரசின் மானிய நிதியுதவி பெண்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது.இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.