கேபெர்ஹா, நவ. 11- சுமார் 3.5 ஆண்டுகளுக்கு பின் இந்திய டி20 அணியில் இரண்டாவது முறையாக வாய்ப்பை பெற்ற வருண் சக்கரவர்த்தி ஒவ்வொரு போட்டியிலும் தனது முத்திரையை பதித்து வருகிறார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அவர் ஐந்து விக்கெட் வீழ்த்தி பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறார். இதுவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வருண் சக்கரவர்த்தியின் சிறந்த பந்துவீச்சு ஆகும். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் வருண் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்த 5 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணிக்காக சிறந்த டி20 பந்துவீச்சை பதிவு செய்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார். யுஸ்வேந்திர சாஹல் 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தியதே இந்திய பவுலர் ஒருவரின் சிறந்த சர்வதேச டி20 பந்து வீச்சாக உள்ளது. அவருக்கு அடுத்த இடத்தை பிடித்து இருக்கும் வருண் சக்கவர்த்தி 17 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த வீரர்கள் பட்டியலிலும் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார் வருண் சக்கரவர்த்தி. பாகிஸ்தான் அணியின் உமர் குல் 6 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தியதே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சிறந்த பந்துவீச்சாக உள்ளது. அது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கட் கவுன்சிலில் முழு உறுப்பினர் அணிகளுக்கு மத்தியில் தோல்வி அடைந்த போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து இருக்கிறார் வருண் சக்கரவர்த்தி. இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணியிடம் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்தது. இந்தத் தோல்வியிலும் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தியது மட்டுமே இந்திய அணிக்கு ஆறுதலாக அமைந்தது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சரியான காரணம் இன்றி வருண் சக்கரவர்த்தி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். ஆனால், தனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பில் ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட் வேட்டையாடி தனது இடத்தை நிலையானதாக மாற்றி இருக்கிறார்.