பிரியங்கா வெற்றியை எதிர்த்து பா.ஜ., நவ்யா ஹரிதாஸ் மனு

கொச்சி: டிசம்பர் 21-கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதிக்கு சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலரும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் நவ்யா ஹரிதாஸ் களமிறக்கப்பட்டார்.
இந்த தேர்தலில், ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி பெற்றார். இந்நிலையில், பிரியங்காவின் வெற்றியை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் நவ்யா ஹரிதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘தேர்தலுக்கான வேட்புமனுவில் தனது மற்றும் குடும்பத்தினரின் சொத்து விபரங்களை பிரியங்கா மறைத்துள்ளார்.
உண்மையான விபரங்களை அவர் வழங்கவில்லை. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. அவர் வெற்றி பெற்றது செல்லாது என்பதால், வயநாடு லோக்சபா இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும்’ என, குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.