சென்னை: ஜூலை 11-
கடலூரில் தேவநாதசுவாமி கோயில் நிலத்தில் உள்ள தனியார் பள்ளியை அகற்றக் கோரி பாஜக சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசுத் துறை செயலர்கள் உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினர்.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்திய தற்காக மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். தனியார் பள்ளியின் கோரிக்கையை ஏற்று, வேறுஇடம் வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
கடலூர் கூத்தப்பாக்கத்தில் உள்ள தேவநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான 3.40 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளியை அகற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக ஆன்மிக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.
மாற்று இடம் வழங்க உத்தரவு: இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த தனியார் பள்ளிக்கு மாற்று இடம் ஒதுக்கி கொடுத்து, கோயில் நிலத்தில் உள்ள பள்ளியை அப்புறப்படுத்தி, அந்த இடத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 2024-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி, ஐஏஎஸ் அதிகாரிகளான தமிழக வருவாய் துறை செயலர் அமுதா, பள்ளிக்கல்வித் துறை செயலர் மதுமதி, அறநிலையத் துறை செயலர் சந்திரமோகன், அறநிலையத் துறை ஆணையர் ஸ்ரீதர், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் அறநிலைய துறை இணை ஆணையர் பரணிதரன், தேவநாதசுவாமி கோயில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக வினோத் ராகவேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.











