திருவாரூர்: ஜூலை 21-
திருவாரூரில் தங்கியிருந்த பழனிசாமியை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்காமல் சென்றது, அதிமுக, பாஜக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை ஜூலை 7-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கினார். இதில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், பழனிசாமியின் பிரச்சார சுற்றுப்பயணத்தில் பாஜகவினரும் பங்கேற்க வேண்டும் என கட்சியினருக்கு நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், ஜூலை 18-ம் தேதி முதல் திருவாரூர், நாகை மாவட்டங்களில் பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ள பழனிசாமி, நேற்று முன்தினம் இரவு திருத்துறைப்பூண்டியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, திருவாரூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று ஓய்வெடுத்தார்.
இந்த சூழலில் நாகையில் பாஜக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக, திருவாரூர் வழியாக சென்ற நயினார் நாகேந்திரனுக்கு பாஜகவினர், திருவாரூரில் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, நயினார் நாகேந்திரன், பழனிசாமியை சந்திப்பார் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவரை சந்திக்காமல் சென்றதால், இரு கட்சியின் தொண்டர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
சென்னையில் அதிமுக, பாஜக கூட்டணியை ஏப்.11-ம் தேதி உறுதி செய்து அமித்ஷா அறிவித்தபோது, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் நடைபெற போகிறது. முதல்வராக பழனிசாமி இருப்பார் என்றார். பின்னர், அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என பழனிசாமி தெரிவித்தார்.















