லண்டன், ஆகஸ்ட் 2- இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 242 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 64 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. கருண் நாயர் 52, வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி மேற்கொண்டு 20 ரன்களை சேர்ப்பதற்குள் எஞ்சிய 4 விக்கெட்களையும் தாரை வார்த்தது. கருண் நாயர் 109 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் டங்கின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் 55 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் கஸ் அட்கின்சன் வீசிய ஷாட் பிட்ச் பந்தை லெக் திசையில் தூக்கி அடித்த போது டீப் ஸ்கொயர் திசையில் ஜேமி ஓவர்டனிடம் கேட்ச் ஆனது. இவர்களை தொடர்ந்து முகமது சிராஜ் 0, பிரசித் கிருஷ்ணா 0 ரன்களில் கஸ் அட்கின்சன் பந்தில் நடையை கட்ட இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 69.4 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தில் 34 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் கடைசி 4 விக்கெட்களையும் பறிகொடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் கஸ் அட்கின்சன் 5, ஜோஷ் டங்க் 3 விக்கெட்களையும், கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிராவ்லி, பென் டக்கெட் ஜோடி பாஸ்பால் முறையில் அதிரடி தொடக்கம் கொடுத்தனர். ஆகாஷ் தீப் வீசிய 4-வது ஓவரில் பென் டக்கெட் ரிவர்ஸ் ரேம்ப் ஷாட்டில் சிக்ஸர் விளாசி மிரட்டினார். தொடர்ந்து ஆகாஷ் தீப் வீசிய 6-வது ஓவரில் பென் டக்கெட் 3 பவுண்டரிகள் அடித்தார். முகமது சிராஜ் வீசிய அடுத்த ஓவரில் ரேம்ப் ஷாட்டில் விக்கெட் கீப்பரின் பின்புறம் சிக்ஸர் விளாசினார்.




















