
தருமபுரி அக். 25-
மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 65,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையாலும், கர்நாடக அணைகளான கேஆர்எஸ், கபினி அணைகளிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருவதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.அணைக்கு நேற்று முன்தினம் மாலை 45,000 கனஅடியாகவும், இரவு 55,000 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து நேற்று மதியம் 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணை ஏற்கெனவே நிரம்பி விட்டதால், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் திறக்கப்படுகிறது. அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 22,500 கனஅடி, 16 கண் மதகுகள் வழியாக 42,500 கனஅடி என மொத்தம் 65,000 கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடி திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், வெள்ளக் கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் நீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்தும், தேவைக்கேற்ப வெளியேற்றியும் வருகின்றனர்.
அணையிலிருந்து 65,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் காவிரிக் கரையோர மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வருவாய், தீயணைப்பு, நீர்வளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், காவிரிக் கரையோரப் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.விநாடிக்கு 65,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள 7 கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அணை மற்றும் சுரங்க மின் நிலையத்தில் மட்டுமே 250 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 50 ஆயிரம் கனஅடியாகவும், நேற்று காலை 4 மணியளவில் 57 ஆயிரம் கனஅடியாகவும், மதியம் 12 மணியளவில் 65 ஆயிரம் கனஅடியாகவும் படிப்படியாக உயர்ந்தது. வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல் ஆறு மற்றும் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்த தடை தொடர்கிறது. காவிரிக் கரையோர பகுதிகளை வருவாய், வனம் உள்ளிட்ட துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.















