
சென்னை: அக்டோபர் 29-
சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு சென்று திரும்பும் பக்தர்கள் வசதிக்காக, தமிழகத்தில் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் இரா.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் ஆலயத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின்போது, தமிழகத்திலிருந்து பக்தர்கள் சென்று வர ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அந்தவகையில், இந்த ஆண்டும் நவ.16-ம் தேதி முதல் ஜன.16-ம் தேதி வரையில், சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள், குளிர்சாதன பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி, டிச.27-ம் தேதி முதல் டிச.30-ம் தேதி மாலை 5.00 மணி வரை கோயில்நடை சாத்தப்படுவதால் டிச.26-ம்தேதி முதல் டிச.29-ம் தேதி சிறப்புப் பேருந்து இயக்கப்படாது.மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்துதரப்படும். 60 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, www.tnstc.in மற்றும் TNSTC Official app ஆகிய இணையத்தளங்களில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014452, 9445014424 மற்றும் 9445014463 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.















