
ராமநாதபுரம்: அக்டோபர் 29-ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 63-வது குருபூஜை விழா மற்றும் 118-வது ஜெயந்தி விழா 3 நாட்களுக்கு நடைபெகிறது. நேற்று காலை ஆன்மிக விழா தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில், உலக நன்மைக்காக கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, தேவர் சிலைக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு, லட்சார்ச்சனை, மலர் அர்ச்சனை நடைபெற்றது. இதில், மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று (அக். 29) இரண்டாம் கால யாகசாலை பூஜை, லட்சார்ச்சனை விழாவின் தொடர்ச்சி மற்றும் அரசியல் விழா நடைபெறுகிறது.
நாளை (அக்.30) நடைபெறும் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில், காலை 9 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளனர்.
தொடர்ந்து, காலை 10 மணிக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்த உள்ளார்.
இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். விழாவையொட்டி, தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில், ராமநாதபுரம் சரக டிஐஜி மூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் மற்றும் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.















