டிரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு

சியோல்: அக். 30-
தென் கொரியா உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் இன்று சந்தித்து பேசினார்.
ஆசிய நாடான தென் கொரியாவின் ஜியாங்ஜு நகரில், ஏ.பி.இ.சி., எனப்படும் ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு அக்டோபர் 31ம் தேதி மற்றும் நவம்பர் 1ல் நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தென்கொரியா சென்றுள்ள டிரம்ப், அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று (அக்.30) சந்தித்து பேசினார்.
ஆறு ஆண்டுக்கு பின் நடைபெற உள்ள இந்த சந்திப்பில், அமெரிக்காவின் வரிவிதிப்பு விவகாரம் மற்றும் வர்த்தக போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சு நடத்தியதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சிறந்த தலைவர் ஜி ஜின்பிங் :சீன அதிபரை சந்தித்து பேசிய பிறகு அதிபர் டிரம்ப் கூறியதாவது: சீன அதிபர் உடனான சந்திப்பு வெற்றிகரமாக இருக்கும். நாங்கள் ஒருவரையொருவர் நன்கு அறிவோம். நாங்கள் எப்போதும் சிறந்த உறவை கொண்டுள்ளோம்.
சீனாவின் மிகவும் மரியாதைக்குரிய அதிபர் ஜி ஜின்பிங். ஜி ஜின்பிங் ஒரு சிறந்த நாட்டின் சிறந்த தலைவர். மேலும் நீண்ட காலத்திற்கு நாங்கள் ஒரு அற்புதமான உறவைக் கொண்டிருக்கப் போகிறோம் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியதாவது: வலுவான சீன-அமெரிக்க உறவுகளை உறுதி செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக, சீனாவும் அமெரிக்காவும் கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என்று நான் பலமுறை பொதுவில் கூறியுள்ளேன்.
வரலாறு நமக்குக் கற்றுக் கொடுத்தது இதுதான். அதிபர் டிரம்பை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, மேலும் பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் உங்களை மீண்டும் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட பின், நாங்கள் மூன்று முறை தொலைபேசியில் பேசியுள்ளோம், பல கடிதங்களைப் பரிமாறிக் கொண்டோம், நெருங்கிய தொடர்பில் இருந்தோம். சீனா-அமெரிக்க உறவுகள் ஒட்டுமொத்தமாக நிலையானதாகவே உள்ளன. அவ்வப்போது உலகின் இரண்டு முன்னணி பொருளாதார நாடுகளுக்கு இடையே மோதல்கள் ஏற்படுவது இயல்பானது.

பாரட்டுக்கள்: இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்க உங்களுடன் தொடர்ந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன். அதிபர் டிரம்ப், உலக அமைதி குறித்து மிகுந்த அக்கறை கொண்டு இருக்கிறார். மேலும் பல்வேறு நாடுகளின் எல்லை பிரச்னைகளைத் தீர்ப்பதில் நீங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளீர்கள். காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் சமீபத்திய முடிவுக்கு உங்கள் பெரும் பங்களிப்பை நான் பாராட்டுகிறேன்.

முக்கிய பங்கு : மலேசியாவிற்கு நீங்கள் சென்றபோது, ​​கம்போடியா-தாய்லாந்து எல்லையில் அமைதிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாக டிரம்ப் முக்கிய பங்கு வகித்து உள்ளார். எல்லை பிரச்னைகளைத் தீர்க்க அமைதிப் பேச்சுவார்த்தைகளை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். இன்று உலகம் பல கடினமான பிரச்னைகளை எதிர்கொள்கிறது. இவ்வாறு ஜி ஜின்பிங் கூறினார்.