
வாஷிங்டன்: நவம்பர் 20-
இந்தியாவில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா அன்மோல் பிஷ்னோய் உட்பட 200 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அங்கு சட்டவிரோதமாக வசித்து வந்த இந்தியர்கள் ஆயிரக்கணக்கானோர் இதுவரை நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் தேடப்படும் நிழல் உலக தாதாவான அன்மோல் பிஷ்னோய் உள்பட 200 இந்தியர்களை அமெரிக்கா நாடுகடத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் நேற்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
நிழல் உலக தாதாவான லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர்தான் அன்மோல் பிஷ்னோய் என்பது குறிப்பிடத்தக்கது.
தாதா லாரன்ஸ் மீது மகாராஷ்டிரா அமைச்சர் பாபா சித்திக்கியை கொலை செய்த வழக்கு, நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருடைய சகோதரரான அன்மோல் பிஷ்னோய் போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு மாறி மாறி பயணம் செய்தது போலீஸாருக்கு தெரியவந்தது. பாபா சித்திக்கி கொலை வழக்கில் அன்மோல் பிஷ்னோய்க்கும் தொடர்பிருப்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில்தான் அன்மோல், கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு போலீஸார் ஆங்க்கிள் மானிட்டர் எனப்படும் கண்காணிப்புக் கருவியை பொருத்தினர். இது ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட கருவியாகும். இதன்மூலம் கைதான நபர்கள், ஜாமீனில் வெளிவந்தாலும் கூட அவர்கள் செல்லும் இடங்களை போலீஸாரால் கண்காணிக்க இயலும். இது கருப்பு நிறப் பட்டையாக இருக்கும். இதனை, உடலில் இருந்து அவ்வளவு எளிதாக அகற்ற இயலாது. அண்மையில் அன்மோல் பிஷ்னோயை பிடிப்பதற்காக மகாராஷ்டிர போலீஸார் ரெட் கார்னர் நோட்டீஸை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில்தான் அவர் தற்போது அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். அன்மோலின் சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது அகமதாபாத் சபர்மதி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

















