புதிய ஓய்வூதிய திட்டம் கண்துடைப்பு நாடகம்: பா.ஜ.,

சென்னை: ஜன.6-
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு ஊழியர்களுக்காக, தி.மு.க., அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டம், முற்றிலும் கண்துடைப்பு நாடகம். தற்போது, நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், அரசு ஊழியர் தன் ஊதியத்தில் இருந்து, 10 சதவீதம் பங்களிக்கிறார். அதேபோல், அரசும், 10 சதவீதம் பங்களித்து வருகிறது.
புதிதாக அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டத்தில், அரசு ஊழியர் ஒவ்வொரு மாதமும், 10 சதவீதம் பங்களித்து கொண்டே வர வேண்டும். ஊழியர் ஓய்வு பெறும்போது, பற்றாக்குறை வந்தால், அரசு தன் நிதியில் இருந்து, அதை ஈடு செய்யும் என்று கூறுகிறது. உண்மையில் பற்றாக்குறை வர வாய்ப்பில்லை.
ஏனெனில், மாதம் 50,000 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவர், அதிலிருந்து 10 சதவீதத்தை, வங்கி கணக்கில் முதலீடு செய்து வந்தாலே, ஓய்வுபெறும் போது, அது, 1.41 கோடி ரூபாயாக இருக்கும்.
இதற்கு, 8 சதவீத வட்டி கணக்கிட்டால், அதன் வாயிலாக, மாதம் 94,518 ரூபாய் கிடைக்கும். இங்கு தான் பற்றாக்குறை வரும் என்றும், அதை நாங்கள் ஈடு செய்வோம் என்றும் அரசு ஏமாற்றி இருக்கிறது.
ஒரு அரசு ஊழியர், 23 வயதில், 2003ல் பணியில் சேர்ந்தால், இந்த ஓய்வூதிய திட்டத்தின்படி, அவருக்கான உண்மையான ஓய்வூதியம், 2040க்கு பின்பே துவங்கும்.
அப்ேபாது திட்டத்தை அறிவித்த அரசு இருக்க போவதில்லை. இன்றைய அறிவிப்பு வாயிலாக, நாளைய அரசு மீது நிதிச்சுமையை வைக்கும், அரசியல் தந்திரம்.
ஏற்கனவே, ‘நீட்’ தேர்வு ரத்து போன்ற பொய் வாக்குறுதிகளை வழங்கிய தி.மு.க., தற்போது அரசு ஊழியர்களை ஏமாற்ற, ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.