புதுடெல்லி: ஜனவரி 23 –
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்ட தொழிலாளர்கள் பங்கேற்ற மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் நோக்கம் ஏழைகளுக்கு உரிமைகளை வழங்குவதாக இருந்தது. இத்திட்டத்தின் அடிப்படையே ‘உரிமை’ என்ற வார்த்தைதான். தற்போது புதிய ஊரக வேலை சட்டத்தின் மூலம் உரிமை என்ற அடிப்படை கருத்தையே முடிவுக்கு கொண்டு வரமோடி மற்றும் பாஜக அரசு விரும்புகிறது.
இதைப் போலத்தான் 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து விவசாயிகளுக்கு அழுத்தம் கொடுத்தனர். அப்போது விவசாயிகளை கஷ்டப்படுத்தியதைப் போலவே தற்போது தொழிலாளர்களுக்கு தொந்தரவு தருகின்றனர். நாம் அழுத்தம் தந்ததன் விளைவாக வேளாண் சட்டத்தை பாஜக ரத்து செய்தது. விவசாயிகளுக்கு எதிரான அதே அடக்கு முறையை தொழிலாளர்கள் மீது பாஜக தற்போது பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.











