
புதுடெல்லி: ஜனவரி 30-
நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.4% வளரும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. வரும் பிப்ரவரி 1ம் தேதி வரும் 2026- 27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பொருளாதார நிலையை ஆய்வு செய்வதற்காக, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்வது வழக்கம்.
இது பொருளாதாரத்தின் குறுகிய கால மற்றும் நடுத்தர கால வாய்ப்புகள் குறித்த கண்ணோட்டத்தை வழங்கும். அந்த வகையில், 2025- 26 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு, தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் பதற்றம், வர்த்தகப் போர் உள்ளிட்ட காரணங்களால் உலகளாவிய சூழல் தொடர்ந்து பலவீனமாகவே உள்ளது. இத்தகைய பின்னணியில், இந்தியாவின் செயல்பாடு தனித்து நிற்கிறது. நடப்பு 2025- 26 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இதுபோல 2026- 27 நிதியாண்டில் ஜிடிபி 6.8 முதல் 7.2% வளரும் என கணிக்கப்பட்டுள்ளது.
விநியோகத்தைப் பொறுத்தவரை, சேவைத் துறை வளர்ச்சியின் முக்கிய உந்து சக்தியாக நீடிக்கிறது. இத்துறை 9.1% வளர்ச்சியை எட்டும். மத்திய அரசின் வருவாய் ஜிடிபியில் 9.2 சதவீதமாக வலுவடைந்துள்ளது. நேரடி வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2025 நிதியாண்டில் 9.2 கோடியாக அதிகரித்துள்ளது. 2025 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.17.4 லட்சம் கோடியாக இருந்தது.இது முந்தைய ஆண்டைவிட 6.7% அதிகம். மத்திய அரசின் மூலதன செலவினம் 2025 நிதியாண்டில் ஜிடிபியில் 4 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிக அளவிலான பொது முதலீடுகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தபோதிலும், இந்தியா தனது கடன்-ஜிடிபி விகிதத்தை 2020-லிருந்து சுமார் 7.1 சதவீதம் வரை குறைத்துள்ளது.
வங்கித் துறை செயல்பாடுகள்: நாட்டின் பணவியல் மற்றும் நிதியியல் துறை 2026 நிதியாண்டில் வலுவான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளது. வணிக வங்கிகளின் சொத்து தரம் முன்னேறி உள்ளது. 2025 செப்டம்பர் நிலவரப்படி, மொத்த வாராக் கடன் விகிதம் 2.2% ஆகவும் நிகர வாராக் கடன் விகிதம் 0.5% ஆகவும் குறைந்துள்ளது. 2025 டிசம்பர் நிலவரப்படி, வங்கிகளின் மொத்த கடன் வளர்ச்சி முந்தைய ஆண்டைவிட 14.5% அதிகரித்துள்ளது.இது 2024-ல் 11.2% ஆக இருந்தது.பிரதம மந்திரி ஜன் தன் திட்டத்தின் கீழ் 2025 மார்ச் வரை 55.02 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. குறு, சிறு நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் முத்ரா திட்டத்தின் கீழ் 55.45 கோடி பேருக்கு ரூ.36.18 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.2026 நிதியாண்டில் (9 மாதங்களில்) 2.35 கோடி புதிய டிமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மொத்த டிமேட் கணக்கு எண்ணிக்கை 21.6 கோடியைத் தாண்டி உள்ளது. பரஸ்பர நிதி முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 5.9 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 3.5 கோடி பேர் 2-ம் கட்ட நகரங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

















