
பத்தனம்திட்டா: பிப்ரவரி 13-சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகளில் தங்கம் திருடு போன வழக்கை கேரள குற்றப்பிரிவு ஏடிஜிபி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தொழிலதிபர் உன்னி கிருஷ்ணன் போத்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி எஸ்.பி. எஸ்.சசிதரன் தலைமையிலான எஸ்ஐடி குழுவினர் நேற்று சபரிமலைக்கு சென்றனர்.
கோயில் நடை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. பல்வேறு பூஜைகளுக்குப் பிறகு கோயில் மூடப்பட்ட பின்னர் புதிய மாதிரிகளை எஸ்ஐடி சேகரித்தது. அந்த மாதிரிகள் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதன் பின்னர் பிப்ரவரி 19ம் தேதி நீதிமன்றத்தில் எஸ்ஐடி அறிக்கை தாக்கல் செய்யும்.
















