
ஜெய்ப்பூர்: : மே 18-
2025-ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஜெய்ப்பூர் நகரிலுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெற்றி பெற்றுள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இவர்கள்தான் இந்த ஆண்டு நீட் வினாத்தாளை கசிய விட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு அவசியம். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த மே 3-ம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீட் மறுத்தேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.மறுதேர்வுக்கான புதிய ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதில் கேரளா, மகாராஷ்டிர மருத்துவ மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், விசாரணைக்காகச் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதனிடையே, நீட் வினாத்தாள் கசிவு வழக்கின் பின்னணி ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருக்கின்றன. ராஜஸ்தானின் ஜம்வா ராம்கரைச் சேர்ந்த சகோதரர்களான மங்கிலால் மற்றும் தினேஷ் பிவால் ஆகியோர், இந்த ஆண்டுக்கான நீட்-யுஜி வினாத் தாளை குருகிராம் மருத்துவர் ஒருவரிடமிருந்து கடந்த ஏப்ரல் 26ம் தேதி ரூ.30 லட்சத்துக்கு வாங்கியது தெரியவந்துள்ளது. இவர்களில் ஒருவர், சிகார் பகுதியில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த தனது மகனுக்கு அந்த வினாத்தாளைக் கொடுத்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான தினேஷ் பிவாலுக்கு ஓர் அரசியல் கட்சியுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 2025-ம் ஆண்டில் ராஜஸ்தானின் மங்கிலால் மற்றும் தினேஷ் பிவால் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள தகவலும் அம்பலமாகியுள்ளது.மேலும் இவர்கள் 5 பேரும் பிரபலமான மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

















