Home மாவட்டங்கள் பெங்களூர் இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – முக்கிய முடிவு

இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – முக்கிய முடிவு

சென்னை: மே 7 –
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை முடிவு செய்ய திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. முதலில் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராவார் என சொல்லப்பட்ட நிலையில் வாரிசு அரசியல் என்ற விமர்சனம் எழுவதை தடுக்க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்தும் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்கிறார் என சொல்லப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை இழந்ததுடன் முதல்வராக இருந்த ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனினும் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.
ஸ்டாலின் தோல்வி அடைந்ததால் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. கடந்த சில நாட்களாகவே, அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்பார் எனத் தகவல்கள் வெளியாகின. இருப்பினும், கட்சிக்குள்ளும் வெளியிலும் “வாரிசு அரசியல்” என்ற விமர்சனம் வலுவாக முன்வைக்கப்படலாம் என திமுக தலைமை யோசிக்கிறது. ஏற்கனவே திமுகவின் தோல்விக்கு இத்தகைய விமர்சனங்களும் ஒரு காரணம் எனப் பேசப்படும் சூழலில், உதயநிதியை இப்போதே அந்தப் பொறுப்பில் அமர்த்துவது சரியாக இருக்காது என மூத்த நிர்வாகிகள் கருதுவதாகத் தெரிகிறது. வாரிசு அரசியல் விமர்சனங்களைத் தவிர்க்கவும், சட்டசபையில் ஆளுங்கட்சியைத் திறம்பட எதிர்கொள்ளவும் அனுபவம் வாய்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் முன்னாள் அமைச்சரும், கட்சியின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவரது நீண்டகால அரசியல் அனுபவம் மற்றும் ஆளுங்கட்சியினரைச் சட்டமன்றத்தில் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் அவருக்குச் சாதகமாக உள்ளது. இன்றைய கூட்டத்தின் முக்கியத்துவம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு, ஆளுநருக்கும் முறைப்படி கடிதம் அனுப்பப்பட உள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்குப் பதிலாக கே.என்.நேரு தேர்ந்தெடுக்கப்பட்டால், அது திமுகவின் புதிய வியூகமாகப் பார்க்கப்படும். தமிழகத்தில் த.வெ.க ஆட்சியமைக்கத் திமுக இடையூறு செய்யாது என ஏற்கனவே ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், சட்டசபையில் திமுகவின் குரலாக ஒலிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.