
புதுடெல்லி, மே 19- உ.பி.யில் சாலைகளில் தொழுகை நடத்த அனுமதி இல்லை, மீறினால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். உ.பி.யில் வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் சிறப்பு தொழுகையின்போது மசூதிகள் நிறைந்து விடுவது உண்டு. இதனால் முஸ்லிம்கள் மசூதிக்கு வெளியே சாலை அல்லது தெருக்களிலும் நின்று தொழுகை செய்து வந்தனர். இதற்கு உபி அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து லக்னோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: சாலைகள் போக்குவரத்துக்காகவே உள்ளன. எனவே உ.பி.யில் சாலைகளிலும் தெருக்களிலும் தொழுகை நடத்த அனுமதி இல்லை. மசூதிகளில் தொழுகை நடத்த இடமில்லை என்றால், தொழுகைக்கு முறை வைத்துக்கொண்டு நேரம் மாற்றித் தொழுது கொள்ளலாம். இதை அன்புடன் ஏற்றுக்கொண்டால் சரி; இல்லையேல், நாங்கள் வேறு ஒரு முறையை கையாள்வோம். ஏனெனில், தெருக்களில் குழப்பம் நிலவ அரசு அனுமதிக்காது. சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமானது. பேச்சுவார்த்தை மூலம் இணங்க மறுப்பவர்களுக்கு எதிராக, அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சமூக அமைப்போடு இணைந்து வாழ விரும்பினால், அதன் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும். பிரார்த்தனை செய்வது அவசியமான ஒன்றாகும். இடப்பற்றாக்குறை இருந்தால் ஷிஃப்ட் முறையில் பிரார்த்தனை செய்துகொள்ளலாம். ஆனால், சாலைகளில் அதை செய்யக்கூடாது. ஒரு சாமானியக் குடிமகன், நோயாளி, தொழிலாளி, ஊழியர், வணிகர் என பலரும் செல்லும் சாலைகள் மறிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம். அரசின் விதிகள் அனைவருக்கும் பொதுவானவை. சாலைகளில் தொழுகை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

















