
புதுடெல்லி, மே 19- தமிழக இந்து அறநிலையத் துறைக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திராவின் இந்து அறநிலையத் துறை சட்டங்களை எதிர்த்து தயானந்த சரஸ்வதி சுவாமி, சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை கடந்த ஆண்டு ஏப்ரலில் விசாரித்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றங்களை அணுகுமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் பி,வி. நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வு நேற்று மனுக்களை விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பு வாதத்தைக் கேட்டறிந்த நீதிபதிகள், தமிழக இந்து அறநிலையத் துறை சட்டங்களை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்த தீர்ப்பை திரும்பப் பெறுவதாகவும், மறுஆய்வு மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்படுவதாகவும் தெரிவித்தனர். மறு ஆய்வு மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 27-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

















