Home மாவட்டங்கள் பெங்களூர் யானைகள் சண்டையில் உடல் நசுங்கி உயிரிழந்த சென்னை பெண்

யானைகள் சண்டையில் உடல் நசுங்கி உயிரிழந்த சென்னை பெண்

சென்னை: மே 19 –
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள பிரபல துபாரே யானை முகாமில் நடந்த அதிர்ச்சிகரமான விபத்தில், சென்னையைச் சேர்ந்த 33 வயது பெண் ஜின்மு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவருடைய கண்கள் தானம் செய்யப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ஜின்மு, குடகு மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்குள்ள துபாரே முகாமில், காவிரி ஆற்றில் ‘கஞ்சன்’ மற்றும் ‘மார்த்தாண்டா’ ஆகிய இரு யானைகள் குளிப்பதை அவர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென அந்த இரண்டு யானைகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. யானைப் பாகன்கள் எவ்வளவோ முயன்றும், ஆக்ரோஷமடைந்த யானைகளை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. மோதலின் உச்சகட்டமாக, ‘கஞ்சன்’ யானை பலமாக முட்டியதில் நிலைகுலைந்த ‘மார்த்தாண்டா’ யானை தரையில் சாய்ந்தது. எதிர்பாராதவிதமாக, அருகில் நின்று கொண்டிருந்த ஜின்மு, கீழே விழுந்த ராட்சத யானையின் அடியில் சிக்கிக் கொண்டார். இதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இத்தனை சோகங்களுக்கு மத்தியிலும் அந்த பெண்ணின் கண்கள் தானம் செய்யப்பட்டன. அவரது கணவர், ஜின்முவின் கண்களை தானமாக கொடுத்தார். அமைச்சர் உத்தரவு: இந்தக் கோரச் சம்பவம் குறித்து கர்நாடக வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் துறை அமைச்சர் ஈஸ்வர் கந்த்ரே ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள அவர், சுற்றுலாத் தலங்களில் பயணிகளின் பாதுகாப்பை அதிகாரிகள் முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என மிகக் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.