
சென்னை: மே 25-
“எங்களை நீங்கள் தாக்க நினைத்தால் தாராளமாகத் தாக்குங்கள், ஆனால் வாக்களித்த தமிழக மக்களைத் தாக்காதீர்கள்” என திமுகவினருக்கு தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: “எங்களை நீங்கள் தாக்க நினைத்தால் தாராளமாகத் தாக்குங்கள், ஆனால் வாக்களித்த தமிழக மக்களைத் தாக்காதீர்கள். எங்களை விமர்சிக்க ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உரிமை உண்டு. அதற்காக நாங்கள் ஒருபோதும் ஆத்திரப்பட மாட்டோம்.
ஆனால் தமிழக மக்கள் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்பை யாரும் கேள்வி கேட்கவோ அவமதிக்கவோ கூடாது. தமிழக மக்கள் அரசியல் முதிர்ச்சி உடையவர்கள்; அவர்கள் புத்திக் கூர்மையுடனும் தெளிவுடனும் வாக்களிப்பவர்கள். எங்களது தலைவர்கள் அல்லது எங்களது கட்சிக்கு எதிரான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்கக் கூடாது என்று நாங்கள் விழிப்புணர்வுடன் முடிவு செய்தோம்.
நாங்கள் நினைத்திருந்தால், ஒரு தசாப்த காலமாக முக்கிய அமைச்சரவை பதவிகளையும் அதிகாரத்தையும் அனுபவித்துவிட்டு, 2014 மக்களவைத் தேர்தலில் இழைக்கப்பட்ட மாபெரும் துரோகத்தை அனைவருக்கும் நினைவூட்டியிருக்க முடியும். ஆனால் நாங்கள் அதைச் செய்யவில்லை.தமிழக வரலாற்றில் அவர்கள் (திமுக) ஒருபோதும் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததில்லை (தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சி அமைத்ததில்லை) என்பதை நன்றாக அறிந்திருந்தும், எங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் இருந்தபோதிலும் அந்த கூட்டணியில் இணைந்தோம். மக்களின் தீர்ப்பை பணிவுடனும் பெருந்தன்மையுடனும் மதிப்பதே எங்கள் கோட்பாடு’’ எனத் தெரிவித்துள்ளார்.புதிய மாற்றத்தை விரும்பினர்இதேபோல் கிருஷ்ணகிரி முன்னாள் எம்பி செல்லகுமார், “அவர்கள் தரம் தாழ்ந்து போய்விட்டார்கள் என்பதற்காக காங்கிரஸ் தரம் தாழ்ந்து போய்விட முடியாது. ஒவ்வொருவரும் தங்களுடைய ஆழ்மனதில் என்ன இருக்கிறதோ அதைத்தான் வார்த்தைகளாக வெளிப்படுத்துவார்கள்.


















