
சென்னை: ஜூலை 4-
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் என 41 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ஒரே நேரத்தில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத பணம் ரூ.58 லட்சம் கைப்பற்றப்பட்டது. ஆன்லைன் பணப் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் சிக்கின.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசு சேவைகளுக்கு நிர்ணயிக்கப் பட்ட கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், சில அலுவலகங்களில் பல்வேறு சேவைகளுக்கு லஞ்சம் கேட்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. குறிப்பாக, கட்டிட வரைபட அனுமதி, சொத்து வரி பெயர் மாற்றம், வரி மதிப்பீடு மாற்றம், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு, தொழில் உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், பிறப்பு – இறப்பு பதிவுகளில் திருத்தம், ஆக்கிரமிப்பு தொடர்பான நடவடிக்கைகள், அரசு ஒப்பந்தப் பணிகளுக்கான பில் ஒப்புதல், சாலை, வடிகால், தெருவிளக்கு உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள், அரசு வீடு திட்ட பயனாளிகள் ஒப்புதல், சுயஉதவிக் குழு திட்டங்கள், கிராம பஞ்சாயத்து நிர்வாக அனுமதிகள், அரசு நலத்திட்டங்களில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பணம் கொடுக்காதவர்களின் கோப்புகள் வேண்டும் என்றே தாமதம் செய்யப்படுவதாகவும், சில நேரங்களில் காரணமின்றி நிராகரிக்கப்படுவதாகவும் மக்கள் புகார் தெரிவித்தனர்.
50-க்கும் மேற்பட்ட தனிப்படைகள்:
இந்த புகார்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரும், கூடுதல் டிஜிபியுமான அருண், மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த சோதனை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நாள் முழுக்க வசூலாகும் தொகை மாலை நேரத்தில் அதிகாரிகளிடம் அதிகம் இருக்கும் என்பதால், நேற்று அலுவலகப் பணி முடியும் நேரத்தில் திடீரென போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.


















