
ஜகார்த்தா: ஜூலை 8-
இந்தோனேசியாவில் ஐஐஎம் (பெங்களூரு) வளாகம் அமைக்கப்படும் என்று அந்நாட்டு தலைநகர் ஜகார்த்தாவில் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார். அத்துடன், பாதுகாப்பு, கல்வி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), விண்வெளித் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளுக்குப் பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடியை ஜகார்த்தா விமான நிலையத்தில் அதிபர் பிரபோவோ சுபியந்தோ கட்டியணைத்து வரவேற்றார். பின்னர் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்று முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியந்தோவை தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள மெர்டேகா மாளிகையில் நேற்று சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, ‘‘இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய பொற்காலம் இது’’ என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
இந்தியக் கல்வியை உலகளாவிய ரீதியில் கொண்டு செல்லும் முக்கிய முயற்சியாக, புகழ்பெற்ற ஐஐஎம் பெங்களூரு கல்வி நிறுவனத்தின் முதல் சர்வதேச வளாகம் இந்தோனேசியாவில் நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது ஆசியான் பிராந்திய மாணவர்களுக்குப் பெரிதும் உதவும்.பாதுகாப்புத் துறையில் மிகப்பெரிய மைல் கல்லாக, இந்திய – ரஷ்ய கூட்டு தயாரிப்பான ‘பிரம்மோஸ்’ க்ரூஸ் ஏவுகணைகள், இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான ‘அஸ்ட்ரா’ வான் வழி ஏவுகணைகளை இந்தோனேசியாவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸைத் தொடர்ந்து பிரம்மோஸ் ஏவுகணையைப் பெறும் 2-வது ஆசியான் நாடு இந்தோனேசியா என்பது குறிப்பிடத்தக்கது.


















