
புதுடில்லி: ஜூலை 15-
பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் பயங்கரவாதி ஹபீஸ் சையத்திற்கு எதிராக, ஜாமினில் வெளியே வரமுடியாத பிடிவாரண்டை என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி தெற்கு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானை மையமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்’ என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் என்ஐஏ, அண்மையில் கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவனும், மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட சர்வதேச பயங்கரவாதியுமான ஹபீஸ் சையத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது.
மேலும், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதாவைச் சேர்ந்த தலைமறைவு பயங்கரவாதியான ஹபீஸ் சையத், பஹல்காம் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவன் என்றும், அவன் திட்டமிட்டு கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்து வருவதாக என்ஐஏ நீதிமன்றத்தில் தெரிவித்தது.இதனைக் கேட்ட என்ஐஏ சிறப்பு நீதிமன்றம், ஹபீஸ் சையத்திற்கு எதிராக ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. இது தொடர்பான நடவடிக்கை எடுக்கக்கோரி, ஜம்மு என்ஐஏ டிஐஜிக்கு இந்த உத்தரவை அனுப்பி வைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.













