
கிவ், ஜூலை 21- துறைமுக நகரமான ஒடெசா கடற்பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட நான்கு இந்தியர்களில், கேரளாவைச் சேர்ந்த மாலுமி அகில் ஜோயனும் ஒருவர். உக்ரைனின் ஒடெசா துறைமுகத்திற்கு அப்பால் ‘எம்வி கோல்டன் லியோ’ என்ற சரக்குக் கப்பல் மீது ரஷ்யா இத்தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் பலியான அகில் ஜோயன், கேரளாவின் காசர்கோடு மாவட்டம் வெள்ளரிக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர். 26 வயதான இவருக்கு, இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நடைபெற இருந்தது. கடந்த 6 ஆண்டுகளாகக் கடற்படையில் மாலுமியாகப் பணியாற்றி வரும் ஜோயன், விரைவில் தனது வேலையை மாற்றிக்கொள்ளவும் திட்டமிட்டிருந்தார். அவரது குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்களின் தகவல்படி, மின்சாதனக் கடையில் பணிபுரியும் ஜோயன் மற்றும் காப்பீட்டு முகவரான சாலி தம்பதியின் ஒரே மகன் இந்த இளம் மாலுமி ஆவார். மிகவும் எளிய பின்னணி கொண்ட இக்குடும்பத்தின் ஒட்டுமொத்த எதிர்காலமும் அகிலையே சார்ந்திருந்தது என்றும், அவரது வருமானத்தில்தான் மிக சமீபத்தில் அவர்கள் சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டியிருந்தனர் என்றும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்














