
சென்னை: ஆக. 18-
“கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், சிபிஐ விசாரணை வேண்டும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு கூடுதல் நிதி அறிவிக்க வேண்டும்,” என்று தமிழக சட்டப்பேரவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டம் ஹனூர் அருகேயுள்ள காவிரி வனவிலங்கு சரணாலய பகுதியில் கடந்த 15-ம் தேதி அதிகாலையில் மானை வேட்டைதோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய மூவரும் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்தத் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்களது கருத்தை முன்வைத்தனர். அவற்றின் தொகுப்பு வருமாறு:
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தனது கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்கள் சுட்டுக்கொலை, ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். மான் வேட்டையில் ஈடுபட்டதாக 3 தமிழர்களை குற்றம்சாட்டி கொன்றுள்ளது கர்நாடக வனத்துறை.
2 மாநில எல்லை பகுதியில் கொலை நடைபெற்றுள்ளதால் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. வனத்துறை சுட்டுக்கொன்ற தமிழர்கள் குடுபங்களுக்கு ரூ.5 லட்சம் மட்டுமே இழப்பீடு அறிவிப்பு, தமிழக அரசு கூடுதலாக நிதி தர வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தொடராத வகையில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.முன்னதாகப் பேசிய திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் பேசினார். அப்போது அவர், “கர்நாடகாவில் கால்நடை தேடிச்சென்ற 3 தமிழர்களை அம்மாநில வனத்துறையால் போலி என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளனர். அப்பாவி விவசாயிகளை வனத்துறை சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல். பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலையும், உரிய நிவாரணமும் வழங்க வேண்டும்” என்றார். பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் பேசும்போது, “கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். தமிழர்களுக்கான நியாயம், நிவாரணம், நீதி கிடைக்க சிபிஐ விசாரணை நடத்த வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பத்துக்கு நிதி உதவியாக ரூ.1 கோடி வழங்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார். முன்னதாக, கர்நாடக வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களின் உடல்களும் இறுதி திருப்பலிக்கு பின்னர், அவர்களின் சொந்த கிராமங்களில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் பேசுகையில், “தமிழர்களின் உயிரை துப்பாக்கி குண்டுகள் தீர்மானிக்கக்கூடாது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கர்நாடக அரசுக்கு தமிழக அரசும் நம் முதல்வரும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.” என்றார்.












