Home செய்திகள் தேசிய செய்திகள் இளைஞர்களை சிலர் தவறாக வழிநடத்துகிறார்கள் – தர்மேந்திர பிரதான்

இளைஞர்களை சிலர் தவறாக வழிநடத்துகிறார்கள் – தர்மேந்திர பிரதான்

டெல்லி, ஆக. 9- நீட் வினாத்தாள் லீக் விவகாரம் தொடர்பாக நடந்த மாணவர் போராட்டங்களால் மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய தர்மேந்திர பிரதான், தனது ராஜினாமா குறித்து முதல் முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார். அப்போது Gen Z தலைமுறையினரை சிலர் தவறாக வழிநடத்தியதாகக் கூறிய அவர், தானாகவே முன்வந்து ராஜினாமா செய்ததாகவும் குறிப்பிட்டார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஜிஎம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நீட் மாணவர் போராட்டம், ராஜினாமா என பல விஷயங்கள் குறித்து பேசினார். தவறாக வழிநடத்தினர்.அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “Gen Z நம்முடைய குழந்தைகள். அவர்களை சிலர் தவறாக வழிநடத்த முயன்றனர். அமைச்சர் பதவி எனக்கு ஒருபோதும் முக்கியமானதாக இருந்ததில்லை. என்னை யாரும் அமைச்சர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தவில்லை. நானாகவே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ராஜினாமா செய்ததாகச் சொன்னேன். இந்தியாவில் ஆண்டுக்கு குறைந்தது 2 கோடி குழந்தைகள் பிறக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 20 கோடி குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களுக்கு எதிர்காலம் குறித்த கனவுகளும் எதிர்பார்ப்புகளும் உள்ளன. அவர்கள் இந்தியாவை விஸ்வ குருவாக மாற்றுவார்கள். அவர்கள் தான் நம் எதிர்காலம். எனவே, அந்த அமைச்சர் பதவி எனக்கு முக்கியமானதாக இருக்கவில்லை” என்றார். நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், தர்மேந்திர பிரதான் கடந்த ஜூலை 25ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். டெல்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்திய மாணவர் போராட்டங்களுக்கு நாடு முழுக்க ஆதரவு அதிகரித்தது. டெல்லி மட்டுமின்றி மும்பை, சென்னை என பல நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. இதனால் வேறு வழியில்லாமல் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.