
கொல்கத்தா, ஜூன் 1- மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி நேற்று முன்தினம் தாக்கப்பட்டிருந்தார். பாஜக ஆதரவாளர்களால் தாக்குதல் நடந்தது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், மம்தா உடனடியாக அவசரமாக எம்எல்ஏக்களின் கூட்டத்தை கூட்டினார். ஆனால், இந்த கூட்டத்திற்கு பாதிக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆப்சென்ட் ஆகியிருப்பது மம்தாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், பாஜகவிடம் படுதோல்வியடைந்தது. இதனையடுத்து திரிணாமுல் தலைவர்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் சொந்த கட்சியின் எம்எல்ஏக்களே மம்தா காலை வாரியுள்ளனர். எம்எல்ஏக்களின் கூட்டம் கொல்கத்தாவில் உள்ள மமதா பானர்ஜியின் காளிகாட் இல்லத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆனால், எதிர்பாராத விதமாக இந்தக் கூட்டத்தில் கணிசமான எண்ணிக்கையிலான எம்எல்ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். இது மமதா பானர்ஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் கோஷ்டிகள்தான் என்று சொல்லப்படுகிறது. அதாவது மமதாவின் பழைய விசுவாசிகளுக்கும், அபிஷேக் பானர்ஜியின் புதிய தலைமுறை ஆதரவாளர்களுக்கும் இடையே நிலவி வரும் பனிப்போரே இந்தத் உட்கட்சிப் பூசலுக்குக் காரணம். அபிஷேக் பானர்ஜி மம்தாவின் மருமகன் என்பதாலேயே கட்சிக்குள் ஓவராக அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும், இதன் காரணமாக அனுபவமிக்க மூத்த அரசியல் தலைவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்றும் நீண்ட காலமாக விமர்சனங்கள் இருக்கின்றன. இப்படி இருக்கையில், அபிஷேக் பானர்ஜி மீதான தாக்குதலுக்குக் கட்சித் தலைமை உரிய முறையில் எதிர்வினையாற்றவில்லை என்ற அதிருப்தியில் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தில் பங்கேற்ற எஞ்சிய நிர்வாகிகளிடையே பேசிய மமதா பானர்ஜி, கட்சிக்குள் ஒழுக்கமின்மையை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என எச்சரித்துள்ளார். எதிர்க்கட்சியான பாஜக-வை எதிர்கொள்ள வேண்டிய இந்தச் சூழலில், கட்சிக்குள்ளேயே பிரிவினையை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

















