Home செய்திகள் தேசிய செய்திகள் கரப்பான் பூச்சி கட்சி தன்னார்வலர் அடித்துக்கொலை – அபிஜீத் தீப்கே ஆவேசம்

கரப்பான் பூச்சி கட்சி தன்னார்வலர் அடித்துக்கொலை – அபிஜீத் தீப்கே ஆவேசம்

கொல்கத்தா, ஆக. 17- தான் படித்த அரசு பள்ளியின் அவல நிலை குறித்து வீடியோ வெளியிட்டிருந்த கரப்பான் ஜனதா கட்சியின் (CJP) தன்னார்வலரின் தந்தை அடித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விஷயத்தை லேசில் விட மாட்டோம் என்றும்.. பாஜக இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் கரப்பான் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே கறாராக கூறியுள்ளார். கொல்கத்தாவில் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பாங்குரா மாவட்டத்தில் உள்ள கரிசுண்டா கிராமத்தை சேர்ந்த ஷேக் அப்துல் ஹபீஸ் என்ற சிஜேபி தன்னார்வலர், தான் படித்த அரசு பள்ளியின் மோசமான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்து வீடியோ வெளியிட்டிருந்தார். அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த ‘பள்ளியை சரி செய்’ என்ற நாடு தழுவிய பிரச்சாரத்தை அபிஜீத் திப்கே முன்னெடுத்திருந்தார். இதன் ஒரு பகுதியாகவே அப்துல் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வெளியான நிலையில் சிலர் கடந்த 13ம் தேதி ஷேக் அப்துல் ஹபீஸ் வீடுக்குள் புகுந்த அவரின் பெற்றோர்கள் மீது சரமாரியான தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதில் ஷேக் அப்துல் ஹபீஸின் தந்தை ஜனாப் மாஃபிக் படுகாயமடைந்திருக்கிறார். தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜனாப், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தனது x பக்கத்தில் அபிஜீத் திப்கே, “சிறந்த பள்ளிகளை கேட்டதற்காக மக்கள் கொல்லப்படுவது எனது ரத்தத்தை கொதிக்க வைத்திருக்கிறது. அப்துல் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சிஜேபி உறுதுணையாக இருக்கும். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். சம்பவம் தொடர்பாக தற்போதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாஜக ஆதரவாளர்கள் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, சிஜேபி அமைப்பின் உயர்மட்டக் குழுவினர் மேற்கு வங்கத்திற்கு செல்ல உள்ளனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், “கொலை தொடர்பாக 5 பேர் மீது FIR பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் 3 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருக்கின்றனர்” என்று கூறியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் பாஜகவுக்கு தொடர்பு இருக்கிறது என்கிற குற்றச்சாட்டை மேற்கு வங்கத்தின் பாஜக முதல்வர் சுவேந்து அதிகாரி மறுத்துள்ளார். புகாரில் அடையாளம் தெரியாத நபர்கள் என்றே குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.