Home பக்தி காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் 12ல் தங்க தேரோட்டம்

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் 12ல் தங்க தேரோட்டம்

காஞ்சிபுரம், ஜூலை 10- காஞ்சிபுரம் ஏகாம்பaநாதர் கோவிலுக்கு, ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட தங்க தேர் வழங்கப்பட்டது. தேரில் 2 டன் தாமிரத் தகடுகள் பொருத்தப்பட்டு, அதன் மீது தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. தேரின் வெள்ளோட்டம் கடந்த ஆண்டு டிச., 6ல் நடந்தது. தொடர்ந்து, ஜன., 25ல் தங்க தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அன்றைய தினம் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரம் வருகை காரணமாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதை மறுத்த அறநிலையத் துறை அதிகாரிகள், ‘தேருக்கு பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் அளவு மற்றும் அதன் மதிப்பீடு முழுமையாக முடிவடைந்த பிறகே தேரோட்டம் நடத்தப்படும்’ என்றனர். ஆனால், பல மாதங்கள் கடந்தும் தங்கத்தின் மதிப்பீட்டு பணி நிறைவடையவில்லை. இந்நிலையில், நாளை மறுதினம், ஏகாம்பரநாதர் கோவில் விழாவில் இந்த தங்க தேரோட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து இணை கமிஷனர் குமரதுரையிடம் கேட்டபோது, ‘’தங்கத்தின் மதிப்பீட்டு பணி ஒரு புறம் நடந்து வருகிறது. பக்தர்கள் வலியுறுத்துவதால், தங்க தேரோட்டம் நடத்துகிறோம். அறங்காவலர் குழுவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது,’’ என்றார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெகந்நாதன் கூறியதாவது: அறநிலையத்துறை மேலிடத்தில் இருந்து தீர்மானம் நிறைவேற்றி தர கேட்டிருந்தனர்; நாங்கள், தீர்மானம் நிறைவேற்றி தந்துள்ளோம். தேரில் தங்கத்தின் மதிப்பீடு செய்வது, அறநிலையத் துறை கமிஷனர் சொல்வது பொறுத்து தான் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். தேருக்கு பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் மொத்த அளவு, அதன் மதிப்பு உள்ளிட்ட முக்கிய விபரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாததால், தேரோட்டத்திற்கு பின், தங்கத்தில் கையாடல் செய்ய வாய்ப்பிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதே கோவிலில், உத்சவர் சோமாஸ்கந்தர் சிலையில் தங்கத்தை சேர்த்ததில் முறைகேடு செய்ததில் ஐந்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.