Home மாவட்டங்கள் பெங்களூர் கால்நடை மருத்துவர்கள் பணி நியமன ஊழல்: ரூ.5 கோடி சுருட்டல் அம்பலம் 

கால்நடை மருத்துவர்கள் பணி நியமன ஊழல்: ரூ.5 கோடி சுருட்டல் அம்பலம் 

பெங்களூரு, செப். 13- ​கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கே.பி.எஸ்.சி.) நடத்திய பஷுவைத்தியர்கள் (கால்நடை மருத்துவர்கள்) பணி நியமன ஊழல் தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ரூ.5 கோடி வரை கைமாறியிருப்பது முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையில், ரூ.85 லட்சம் பணம் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதை சி.ஐ.டி. அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 273 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் 15 தேர்வர்கள் உட்பட முக்கிய குற்றவாளிகள் பலர் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். அதிகளவில் ரொக்கப் பணமாகவே இந்த பேரம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. பீதர் சௌஹார்தா வங்கி மேலாளரிடம் நடத்திய விசாரணையில், முக்கிய குற்றவாளி கன்னாளே என்பவருடன் தனக்கிருந்த பணப் பரிவர்த்தனை தொடர்பை அவர் ஒப்புக்கொண்டார். ​மறுபுறம், விசாரணைக்கு ஆஜராகாத ஷாந்தா கொஸமனி என்பவருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சி.ஐ.டி. முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானேந்திராவிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவருடன் தொடர்பிலிருந்த பெண் ஒருவரிடமிருந்து ரூ.23 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைப் பறிமுதல் செய்துள்ளனர். மற்றொரு குற்றவாளியான பசவராஜ் கன்னாளேவின் கூட்டாளிகளைப் பிடிக்க வலைவீசப்பட்டுள்ளதால், மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கே.பி.எஸ்.சி. நடத்திய 3 முக்கிய பணி நியமனங்களிலும் ஷாந்தா கொஸமனி முறைகேடு செய்தது தெரியவந்துள்ளது. ஆர்.டபிள்யூ.டி.  துறை உதவி செயற் பொறியாளர் பணி நியமன ஊழலிலும் இவருக்குத் தொடர்புள்ளது. 2023-ல் இதுகுறித்த துணைக்கமிட்டி விசாரணை நடைபெற்றபோது, கமிட்டி உறுப்பினர்களுக்குத் தெரியாமல் அன்றைய செயலாளர் லதா குமாரி மூலம் தேர்ச்சிப் பட்டியலை வெளியிட இவர் முயன்றார். ஆனால் உறுப்பினர்களின் பலத்த எதிர்ப்பால் அது தடுக்கப்பட்டு, துணைக்கமிட்டியிலிருந்தே அவர் தூக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.