
நாசிக், ஏப்ரல் 18- நாசிக் டிசிஎஸ் அலுவலக லவ் ஜிகாத் விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. அந்த அலுவலகத்தில் ஏராளமான பெண் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். பலர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் பிபிஓ அலுவலகம் செயல்படுகிறது. அங்கு 150 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இந்த சூழலில் நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றும் 9 பெண் ஊழியர்கள் கடந்த பிப்ரவரி மாதம் நாசிக் காவல் ஆணையர் அலுவலகத்தில் ரகசியமாக புகார் மனுக்களை அளித்தனர். அதில், டிசிஎஸ் அலுவலகத்தின் குறிப்பிட்ட சில அதிகாரிகள் கும்பலாக செயல்பட்டு பெண் ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்வதாகவும், லவ் ஜிகாத் பெயரில் கட்டாய மதமாற்றம் செய்தாகவும் குற்றம் சாட்டினர். 7 பேர் கைது இந்த புகார்களை விசாரிக்க நாசிக் காவல் ஆணையரகம் சார்பில் 7 பெண் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் துப்புரவு ஊழியர்களாக பணியில் சேர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட மூத்த அதிகாரிகளின் நடவடிக்கைகளை 40 நாட்கள் வரை ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போது டிசிஎஸ் பெண் ஊழியர்கள் அளித்த புகார் மனுக்கள் உண்மை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 9 பெண் ஊழியர்கள் அளித்த புகார் மனுக்களின்பேரில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன்பேரில் நாசிக் டிசிஎஸ் அலுவலக மூத்த அதிகாரிகள் தவுசிப் அத்தர், டேனிஷ் ஷேக், ரசா மேமன், ஷாரூக் குரேசி, ஆசிப் அன்சாரி, ஷபி ஷேக், பெண் ஊழியர் அஸ்வினி சனானி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். மனித வள மேம்பாட்டு அதிகாரி நீடா கான் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நாசிக் காவல் ஆணையரகம் சார்பில் 12 உயரதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு டிசிஎஸ் அலுவலக ஊழியர்கள் அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது. மகாராஷ்டிர முதல்வர் எச்சரிக்கை மேற்குவங்க தேர்தலையொட்டி மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கொல்கத்தாவில் நேற்று பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறும்போது, “நாசிக் கார்பரேட் லவ் ஜிகாத் விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இதில் தொடர்புடையவர்கள் யாரும் தப்ப முடியாது. இந்த சதியின் பின்னணியில் இருக்கும் அனைவரையும் கண்டுபிடித்து கடுமையான தண்டனையை பெற்றுத் தருவோம். இதுதொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்புகளின் உதவியை கோரி உள்ளோம்’’ என்று தெரிவித்தார். நாசிக் டிசிஎஸ் அலுவலகம் மூடப்பட்டு 150 ஊழியர்களும் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.


















