
சென்னை: மே 28-
இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டுவந்த அதிமுகவினர், ஒன்றாக இணைந்தனர்.
மேலும், தகுதி நீக்கம் கோரி சட்டப்பேரவைத் தலைவரிடம் அளித்த கடிதங்களைத் திரும்பப் பெறுவதாகவும் கடிதம் அளித்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வென்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்பட்டனர். மேலும், தவெக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.
தகுதி நீக்கம் கோரி கடிதம்: அதைத்தொடர்ந்து, இரு அணியினரும் சட்டப்பேரவை அதிமுக தலைவர், கொறடாவைத் தேர்ந்தெடுத்து, பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் கடிதம் அளித்திருந்தனர். அதேபோல், இரு அணியினரும் எதிரணியைச் சேர்ந்த எம்எல்ஏ.க்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யுமாறும் அவரிடம் கடிதம் அளித்தனர்.
இதற்கிடையே, சி.வி.சண்முகம் அணியில் இருந்த மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். மேலும், ஆற்காடு எம்எல்ஏ சுகுமார் உள்ளிட்ட 6 எம்எல்ஏ.க்கள், பழனிசாமி அணிக்கு மாறினார். இதனால் சி.வி.சண்முகம் அணியின் பலம் 15 ஆகக் குறைந்தது.
பழனிசாமியுடன் சந்திப்பு: இந்நிலையில், சி.வி.சண்முகம் அணி எம்எல்ஏக்களான எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் நேற்று சந்தித்து சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், இரு அணியினரும் தலைமைச் செயலகம் புறப்பட்டுச் சென்றனர். அங்கு இரு அணிகள் சார்பிலும், தகுதி நீக்க நடவடிக்கை கோரி பேரவைத் தலைவரிடம் ஏற்கெனவே அளித்த கடிதத்தை திரும்பப் பெறுவதாக கடிதம் அளித்தனர்.
மேலும், அதிமுகவின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக பழனிசாமி, கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை தேர்ந்தெடுத்திருப்பதாகவும் பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்தனர். இந்த நிகழ்வில், சி.வி.சண்முகம் உடன் வரவில்லை. அவர் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. அவருடன் மூத்த நிர்வாகிகள் மேற்கொண்ட சமரசமும் தோல்வியில்முடிந்ததாகக் கூறப்படுகிறது.


















