
ஐஸ்வால், மே 2- மிசோரம் மாநிலத்தில் லுங்லே மாவட்டச் சிறை உள்ளது. இங்கு அடைக்கப்பட்டிருந்த 16 தண்டனைக் கைதிகள், போலி நீதிமன்ற ஆவணங்களைப் பயன்படுத்தி கடந்த 4 மாதங்களில் மோசடியாக விடுவிக்கப்பட்டது விசாரணைக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து லுங்லே மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற அதிகாரிகள், கைதிகளை விடுவிக்க அனுமதிக்கும் நீதிமன்ற உத்தரவுகளை தேடிய போது, எந்த ஆவணமும் இல்லை. கடந்த ஜனவரியில் தொடங்கிய இந்த மோசடி கடந்த வாரம் வரை கண்டறியப்படாமலேயே இருந்துள்ளது. இது தொடர்பாக ஏப்ரல் 25-ம் தேதி காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் இதுவரை 13 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கைதி இறந்துவிட்ட நிலையில் இருவர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். உண்மையான நீதிமன்ற உத்தரவுகளைப் போலவே இவர்கள் போலி விடுதலை உத்தரவுகளை பயன்படுத்தியுள்ளனர். இதற்கு ஜெர்மையா லல்தங்துரா (22) என்ற கைதி மூளையாக செயல் பட்டதாக தெரியவந்துள்ளது.இவர் முதலில் சக கைதிகளின் நம்பிக்கையைப் பெற்ற தாகவும் பிறகு சிறைக்குள் இருந்த சிலரின் உதவியை மிகத் திறமையாகப் பயன்படுத்திக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.





















