
பெங்களூரு: ஜூன் 20-
‘காந்தாரா’ பட புகழ் பிரபல பன்மொழி நடிகை ருக்மிணி வசந்த்.
இவருடைய புகைப்படங்களை ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மார்பிங் செய்து ஆபாசமாக மாற்றி சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பினர். இது நடிகையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், அவருக்குப் பெருத்த மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தது.
கடந்த மே மாதம் இந்த போலி வீடியோக்கள் வைரலான போதே நடிகை ருக்மிணி வசந்த் கடும் ஆவேசம் அடைந்தார். “இணையத்தில் உலா வரும் அந்தப் படங்கள் முற்றிலும் போலியானவை. தொழில்நுட்பத்தை இப்படி அசிங்கமாகப் பயன்படுத்தி,
ஒரு பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிப்பது கண்டனத்திற்குரியது. யாரும் இதை பகிர வேண்டாம்” எனப் பதிவிட்டதோடு, கிரிமினல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். ரசிகர்களும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கொந்தளித்தனர்.
இதைத் தொடர்ந்து, இந்த ஆபாச மார்பிங் கும்பல் குறித்து நடிகை ருக்மிணி வசந்த் போலீசில் அதிரடியாகப் புகார் அளித்தார். புகாரை அடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், நடிகையின் தனிப்பட்ட ரகசியங்களைச் சீரழித்த ரவிகுமார், சந்திரகாந்த் மற்றும் ரஞ்சித் ஆகிய 3 கில்லாடிகளைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், அவர்கள் இந்த மோசடிக்குக் கையாண்ட 3 விலையுயர்ந்த செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 3 பேரும் தற்போது நீதிமன்றக் காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.


















