
புதுடெல்லி: ஆக. 15-
சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆன 2047ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
சுதந்திர தினத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகளை நாம் நினைவு கூரவேண்டும். வந்தே மாதரம் ஒவ்வொரு இந்தியர்களின் இதயத்திலும் ஒலிக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி பறக்கிறது; இன்று டில்லி செங்கோட்டையில் வந்தே மாதரம் ஒலிக்கிறது, இது வரலாற்றின் முக்கிய நாள். நாடு சரித்திர நிகழ்வை காண்கிறது.
சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆன 2047ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும். இந்தியர்களின் கனவுகள் பெரியதாக இருக்க வேண்டும்; அப்பொழுது தான் நாம் புதிய உயரங்களை அடைய முடியும். கடந்த 12 ஆண்டுகளாக, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் முயற்சித்து வருகின்றனர்; இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. மேக் இன் இந்தியா திட்டத்தால் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சியை உலகமே உற்றுநோக்குகிறது. ஒரு காலத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தை பலவீனமான ஐந்து நாடுகளின் பட்டியலில் உலகம் சேர்த்திருந்தது; மக்களின் முயற்சியால் கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா முக்கியப் பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. இந்தியா வளர்ச்சி அடைய இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்
நாம் பிற நாடுகளைச் சார்ந்திருக்க முடியாது; நாம் சுயசார்பு கொண்டவர்களாக மாற வேண்டும். உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; ஒவ்வொரு இந்தியரும் இப்போது உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை மற்றும் சுதேசி தயாரிப்புகளை ஆதரிக்கின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
7 அறிவிப்புகள்!
2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைய மக்கள் அனைவரும் பங்களிக்க வேண்டும் என மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு 7 முக்கிய அறவிப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.
1.அடுத்த ஆண்டில் 1 கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயிற்சி அளிக்கப்படும்.
- பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படும்.
- பாதுகாப்பு துறை தேவைகளைப் பூர்த்தி செய்ய, நவீனமயமாக்கப்பட்ட பயிற்சி அளிக்கப்படும்.
- கிராமங்கள் மற்றும் நகரங்களில் 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே உள்ள விளையாட்டுத் திறமையைக் கண்டறிய நாடு தழுவிய பிரசாரம் செய்யப்படும்.
- அடுத்த 1-2 ஆண்டுகளில் 7-8 புதிய செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் செயல்பாட்டுக்கு வரும்.
- 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனை எட்டுவதை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக 6-7 ஆண்டுகளில் ஐந்து புதிய அணு உலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
- நாட்டின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும்.













