
வாஷிங்டன்: மே 5 –
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துணை அதிபர் கான்வாய் அருகே ஆயுதங்களோடு சுற்றிய மர்ம நபர் மீது சீக்ரெட் சர்வீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து வெள்ளை மாளிகை அருகே லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே உச்சபட்ச பாதுகாப்பு இருக்கும் இடங்களில் ஒன்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை. இது அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருக்கிறது. இதனால் வெள்ளை மாளிகையில் எப்போதுமே உச்சபட்ச பாதுகாப்பு இருக்கும். 24 மணி நேரமும் பாதுகாப்புப் படை, சீக்ரெட் சர்வீஸ், போலீசார் எனப் பல அடுக்கு பாதுகாப்பு இருந்து கொண்டே இருக்கும்.
இதற்கிடையே வெள்ளை மாளிகை அருகே திடீரென நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் ஒரு ஆயுதமேந்திய நபர் மீது சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அருகில் உள்ள வெள்ளை மாளிகை சிறிது நேரம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் பயணித்த வாகன அணிவகுப்பு அந்தப் பகுதியைக் கடந்து சென்ற சில நிமிடங்களிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இருப்பினும், துணை அதிபரைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடக்கவில்லை என்று சீக்ரெட் சர்வீஸ் துணை இயக்குநர் மேத்யூ குவின் தெரிவித்துள்ளார். மேலும், இதில் துணை அதிபருக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லையாம்.
சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிய ஒரு நபரை அதிகாரிகள் நெருங்கியபோது, அவர் அங்கிருந்து தப்பியோடி துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளார். பதிலுக்கு சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த நபர் காயமடைந்து, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோதலில் அந்தப் பகுதியில் நின்றிருந்த ஒரு சிறுவனுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அத்துமீற முயன்ற கோல் ஆலன் என்பவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில நாட்களிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வெள்ளை மாளிகை அருகே பரபரப்பு ஏற்பட்டது. நிலைமையை ஆராய அங்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில், எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்பது உறுதியான உடனேயே லாக்டவுன் நீக்கப்பட்டது. இருப்பினும், அமெரிக்காவில் அடுத்தடுத்து நிகழும் இத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


















