புவனேஸ்வர்: ஜனவரி 26 –
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டம் மோடிபாடா பகுதியைச் சேர்ந்தவர் பாபு லோகர் (75). இவருடைய மனைவி ஜோதி (70).
சமீபத்தில் ஜோதிக்கு பக்கவாதம் ஏற்பட்டது. சம்பல்பூர் மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்துவிட்டு, மேல் சிகிச்சைக்காக கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், தனியார் ஆம்புலன்ஸுக்கு வழங்க பணம் இல்லாததால்,
ரிக்சாவில் மனைவியை ஏற்றிக் கொண்டு ‘முதுமையை பொருட்படுத்தாமல் 300 கி.மீ. தூரத்தை 9 நாட்களில் கடந்த பாபு லோகர்’ கட்டாக் மருத்துவமனையில் தனது மனைவியை சேர்த்தார்.
இரண்டு மாதங்கள் சிகிச்சை முடிந்து கடந்த ஜனவரி 19-ம் தேதி இருவரும் ரிக்சாவிலேயே ஊர் திரும்பினர். அப்போது சவுத்வார் அருகே வந்தபோது, வாகனம் மோதி ஜோதி மீண்டும் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்த சுகாதார மையத்தில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இவர்களது வறிய நிலையைக் கண்டு மனம் இறங்கிய மருத்துவர் விகாஸ், அவர்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளை வழங்கியதுடன், அவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்குத் தேவையான பண உதவியையும் செய்தார்.












