
ஹைதராபாத், ஏப்ரல் 22- நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் அபிஷேக் சர்மா, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக சதம் விளாசி தனது அணியை வெற்றி பெற செய்தார். அவரது ஆட்டத்தின் ஹைலைட் என்ன என்பது குறித்து பார்ப்போம். நடப்பு சீசனில் 7 இன்னிங்ஸில் 323 ரன்களை அவர் விளாசியுள்ளார். இதன் மூலம் இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் அவர் முதலிடத்தில் உள்ளார். இதில் இரண்டு அரைசதம் மற்றும் சதம் விளாசி உள்ளார். இது ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் விளாசும் இரண்டாவது சதம். டி20 கிரிக்கெட்டில் 9-வது சதமாக அமைந்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் உடனான ஆட்டத்தில் 68 பந்துகளில் 135 ரன்களை அவர் எடுத்திருந்தார். இதில் 10 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 198. இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 47 ரன்களில் வெற்றி பெற்றது. “வழக்கம் போலவே பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக ஆடி ரன் சேர்க்க வேண்டும் என திட்டமிட்டேன். எனது இந்த ஆட்டத்துக்கு காரணம் அணியின் பயிற்சியாளர், கேப்டன் எனக்கு ஆதரவு அளித்ததால் சாத்தியமானது. அதன் மூலம் நான் எனது இயல்பான ஆட்டத்தை விளையாட முடிகிறது. ‘L’ கொண்டாட்டம் வழக்கமானதுதான். மைதானத்தில் உள்ள பார்வையாளர்கள், இந்த தொடர் மற்றும் ஒவ்வொரு ஆட்டத்திலும் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்களுக்கு நான் தெரிவிக்கும் அன்பின் வெளிப்பாடுதான் இந்த ‘L’ வடிவ கொண்டாட்டத்துக்கு காரணம். பெற்றோர் முன்பு விளையாடுவது எப்போதும் சிறப்பானது” என ஆட்ட நாயகன் விருதை வென்ற அபிஷேக் சர்மா தெரிவித்தார்.





















