
புதுடெல்லி, மே 8- தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளைப் பெற்ற தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேக்கர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் குழப்பம் நிலவுகிறது. இதுபோன்ற சர்ச்சைகளின் போது, எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பே பெரிதும் விவாதிக்கப்படுகிறது. கடந்த 1994-ல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பில், ஒரு ஆட்சிக்குப் பெரும்பான்மை ஆதரவு உள்ளதா என்பதை சட்டப்பேரவையில்தான் அறிய முடியும். ஆளுநர் மாளிகையில் இல்லை. பெரும்பான்மை ஆதரவு உள்ளதா என்பதை, ஆளுநர் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ அல்லது சொந்தக் கணிப்பின் அடிப்படையிலோ தீர்மானிக்க இயலாது என்று உறுதிபடக் கூறியிருந்தது. அதன்பின்னர், பெரும்பான்மையை நிரூபிக்கும் விவகாரத்தில் சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்தி முடிவு எடுப்பது என்றானது. நம்பிக்கை வாக்கெடுப்பு இந்திய அரசியலில் ஒரு அரசியலமைப்பு மரபாக மாறியது. பிறகு கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தராகண்ட் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற பல வழக்குகளில், உச்ச நீதிமன்றம் பொம்மை தீர்ப்பை மேற்கோள் காட்டி, உடனடி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டதும் நடந்தேறின. இதற்கு பல முன் உதாரணங்கள் உள்ளன.
கடைசியாக மகாராஷ்டிராவில் கடந்த 2019-ல் நடைபெற்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியானது. அப்போது, சிவசேனாவில் உருவானப் பிளவு பாஜக கூட்டணியின் பெரும்பான்மைக் கணக்கீடுகளைக் குழப்பியது. எனினும் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் திடீரென பதவியேற்றனர். தங்களுக்கு என்சிபியின் ஆதரவு இருப்பதாக இவர்கள் கூறியதை எதிர்க்கட்சிகள் எதிர்த்தனர். உச்ச நீதிமன்றம் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.


















