Home செய்திகள் தேசிய செய்திகள் முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித்ஷா.. என்ன நடந்தது?

முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித்ஷா.. என்ன நடந்தது?

டெல்லி, மே 28- தமிழக முதலமைச்சர் விஜய் டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அவர் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தச் சந்திப்பு நடக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து தற்போது டெல்லி வட்டாரத்தில் இருந்து சில தகவல்கள் வெளியாகிப் பரப்பரப்பைக் கிளப்பியுள்ளன. இன்று மாலை பிரதமர் மோடியை தமிழக முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில், காவிரி குறுக்கே கர்நாடகா அணை கட்ட அனுமதி தரக்கூடாது, அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 4 கோரிக்கைகளை முதல்வர் விஜய் பிரதமர் மோடியிடம் முன்வைத்துள்ளார். அதைத்தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்துப் பேசியுள்ளார். சந்திப்பு ரத்தா? தமிழக முதலமைச்சர் விஜய், அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருந்ததாகவும், ஆனால் அமித் ஷா அதற்கு நேரம் ஒதுக்கவில்லை என்றும் முதலில் தகவல்கள் பரவின. இதனால் சந்திப்பு ரத்தாகிவிட்டது என்று செய்திகள் வெளியாகத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில். சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று வெளியான தகவல் தவறானது. ஏனெனில், சந்திப்பிற்கான நேரம் இன்னும் ஒதுக்கப்படவே இல்லை. நேரம் ஒதுக்கப்படாத போது அது எப்படி ரத்தாகும்? என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் சந்திக்க வாய்ப்பில்லை முதல்வர் விஜய் மற்றும் அமித் ஷா இடையேயான சந்திப்பு நாளையும் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே உள்துறை அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசரப் பயணமாக குஜராத் செல்ல உள்ளார். இதன் காரணமாக, நாளையும் முதல்வர் விஜய்யைச் சந்திக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் தரப்பில் இருந்து சந்திப்பிற்கான நேரம் கேட்கப்பட்டது உண்மைதான். ஆனால், அமித் ஷாவின் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட குஜராத் பயண அட்டவணையால் இதற்கான நேரம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று டெல்லி வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பிரதமர் மோடியை முதல்வர் விஜய் ஏற்கனவே சந்தித்துப் பேசியுள்ள நிலையில், அமித் ஷாவுடனான சந்திப்பு தள்ளிப் போயிருப்பது தமிழக அரசியல் அரங்கில் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.