
அகமதாபாத், ஜூன் 2- ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து 2-வது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இழந்தது. முதலில் பேட் செய்த குஜராத் அணியை ஷார்ட் பால் வியூகத்தை பயன்படுத்தி ஆர்சிபி அணி 155 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. 156 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி அணி பவர்பிளேவில் 70 ரன்களை குவித்து வெற்றிக்கான பாதையை எளிதாக்கியது. கடைசி வரை களத்தில் நின்று 42 பந்துகளில், 75 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு விராட் கோலி முக்கிய பங்காற்றினார். இறுதிப் போட்டிக்கு பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறியதாவது: நாங்கள் 180 முதல் 190 ரன்கள் எடுத்திருந்தால், அது ஒரு நல்ல போட்டியாக இருந்திருக்கும். ஆடுகளம் ஆங்காங்கே சற்று மாறுபட்ட வேகத்தில் இருந்தது. பந்து சில நேரம் மெதுவாகவும், சில நேரம் வேகமாகவும் வந்தன. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆரம்பத்தில் பந்து சற்று ஸ்விங் ஆனது. நாங்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்துவிட்டதால், எங்களால் இறுதிவரை உத்வேகத்தை பெற முடியாமல் போனது.





















