
தேனி: ஜூன் 11–-
பாரதிராஜா தனது 84-வது வயதில் காலமானதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த திரையுலகமும் தமிழகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. சென்னை நீலாங்கரையில் அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தியதையடுத்து, அவரது உடல் இறுதிச் சடங்கிற்காகத் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்தப் பண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் பாரதிராஜாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் கிராமத்து மண்வாசனையையும், யதார்த்த மனிதர்களின் வாழ்வியலையும் உலகத் தியேட்டர்களுக்கு கொண்டு சேர்த்த “இயக்குநர் இமயம்” பாரதிராஜா, தனது 84வது வயதில் காலமானார் என்ற செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் பாரதிராஜாவோடு சினிமாவில் சரித்திரம் படைத்த இசைஞானி இளையராஜா, கங்கை அமரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், மூத்த நடிகர் சிவக்குமார், சூர்யா, இயக்குநர் பாக்யராஜ், மாரி செல்வராஜ் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட அரசியல், திரையுலகப் பிரபலங்கள் பலரும் கண்ணீர் மல்க தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர். இயக்குநர் இமயத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக, நாளை ஒருநாள் மட்டும் அனைத்து தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாகத் தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. வத்தலகுண்டு பண்ணை சென்னை நீலாங்கரை இல்லத்தில் நேற்று இரவு 9 மணி வரை பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல், பிறகு அவரது சொந்த மாவட்டமான தேனிக்கு நள்ளிரவில் எடுத்துச் செல்லப்பட்டது.
தற்போது, வத்தலக்குண்டு அருகே கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள காட்ரோட் பகுதியில் அமைந்திருக்கும் அவரது சொந்தப் பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றியுள்ள கிராம மக்கள் திரண்டு வந்து தங்களின் மண்ணின் மைந்தனுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.. சொந்த மண்ணில் நிரந்தர ஓய்வு இந்தச் சூழ்நிலையில்தான், பாரதிராஜாவின் மறைவுக்குப் பின்னால் இருக்கும் அந்த உருக்கமான கடைசி ஆசை குறித்த தகவல் வெளிவந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள தனது மகள் ஜனனியின் வீட்டில் பாரதிராஜா தங்கியிருந்தபோது, தனது இறுதிப் பயணம் குறித்து மிகவும் எதார்த்தமாகவும் உருக்கமாகவும் பேசினாராம். “நான் இறந்துவிட்டால், என் உடலை சென்னையில் வைக்கக் கூடாது, வத்தலகுண்டுவில் உள்ள என் தோட்டத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும்” என்று தனது மகளிடம் உருக்கமாகத் தனது கடைசி ஆசையைத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பார்வைக்காக, தேனியில் பாரதிராஜா உடல் வைக்கப்பட்டுள்ளது.. சொந்த மண்ணில் இயக்குனரின் உடலை கண்டு, அங்குள்ள மக்கள் துக்கம் தாளாமல் வெடித்து கதறி அழுகின்றனர்.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்திருந்த ரசிகர்களும், பொதுமக்களும், பாரதிராஜாவுக்கு தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.. மற்றொருபக்கம் இறுதிச்சடங்கு பணிகளும் நிறைவு பெற்று வருகின்றன.. பாரதிராஜாவின் இறுதிச்சடங்கில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதால், காவலர்கள் வத்தலகுண்டு பகுதியில் குவிந்துள்ளனர்.


















