
தஞ்சாவூர்: ஜூன் 12-
மேட்டூர்: டெல்டா பாசனத்துக்காக வழக்கமாக ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை, போதிய நீர் இல்லாத காரணத்தால் 62-வது முறையாக இந்த ஆண்டு குறித்த தேதியில் திறக்கப்படவில்லை. அணை திறப்பு தாமதமாவது குறித்தோ, குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் குறித்தோ அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் வராததால் டெல்டா விவசாயிகள் கவலைஅடைந்துள்ளனர்.டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படுவது வழக்கம். அதே நேரம், அணையில் நீர் இருப்பைப் பொறுத்து ஜூன் 12-ம் தேதிக்கு முன்பாகவோ அல்லது காலதாமதமாகவோ அணையில் இருந்து நீர் திறந்து விடப்படும்.அணையில் குறைந்தபட்சம் 90 அடி நீர் இருந்தால் மட்டுமே டெல்டா சாகுபடிக்கு முழுமையாக திறக்க முடியும். ஆனால் நடப்பு பாசன ஆண்டுக்கு இன்று (ஜூன் 12) நீர் திறக்கப்பட வேண்டிய நிலையில் அணையின் நீர்மட்டம் 79.62 அடியாக உள்ளது. எனவே, இன்று நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
அணையின் 93 ஆண்டு கால வரலாற்றில் உரிய காலத்தில்(ஜூன் 12) டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படாமல்போவது இது 62-வது முறையாகும். உரிய நாளான ஜூன் 12-ம் தேதி 20 முறையும், நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் ஜூன் 12-ம் தேதிக்கு முன்பு 11 முறையும் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இந்தாண்டு குறிப்பிட்ட நாளில் அணை திறக்காததால், டெல்டா மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கரில் செய்ய வேண்டிய குறுவை சாகுபடியின் பரப்பளவு 50 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், பம்புசெட்பாசன வசதி கொண்ட விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, டெல்டா மாவட்டங்களில் தற்போது சுமார் 3 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 1.75 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது மின் தட்டுப்பாடு ஏற்பட்டு, நெற்பயிர்கள் காய்ந்து வருவதால் ஆங்காங்கே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, விவசாயிகளுக்கு 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்குவதுடன், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி விவசாயிகள்: இதுகுறித்து காவிரி உரிமை செயற்பாட்டாளர் வெ.ஜீவக்குமார் கூறியது: மேட்டூர் அணையின் நீர் இருப்பு என்பது இந்தாண்டு தொடக்கத்திலிருந்தே குறைவாகத் தான் உள்ளது. ஆனால், நமக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசிடமிருந்து பெற தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.


















