
வாஷிங்டன், ஜூலை 11-“என்னைக் கொல்ல முயற்சித்தால் ஈரானை நோக்கிப் பாய ஆயிரம் ஏவுகணைகள் தயாராக உள்ளன” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அதிபர் ட்ரம்ப்பை கொல்ல ஈரான் புது திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்காவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை கொடுத்துள்ளதாக தகவல். அதை உறுதி செய்யும் வகையில் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் ‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கொல்வோம்’ என்ற பேனரை ஏந்தி இருந்தனர். இந்தச் சூழலில் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார். “அமெரிக்காவில் அதிபர் பொறுப்பில் உள்ளவரை (அதாவது என்னை) படுகொலை செய்யவோ அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபட ஈரான் முயன்றால், அதை எதிர்கொள்ளும் வகையில் அந்த தேசத்தை நோக்கிப் பாய ஆயிரம் ஏவுகணைகள் தயாராக உள்ளன. ஈரானின் அனைத்து பகுதிகளையும் தாக்குவதற்கான உத்தரவு ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டு விட்டது. அமெரிக்க ராணுவமும் அதற்கு தயாராக உள்ளது. இந்த உத்தரவு ஓராண்டு காலம் அமலில் இருக்கும். அது நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது” என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேற்காசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார். ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த மாதம் 17-ம் தேதி போர் நிறுத்தம் தொடர்பான அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் 14 அம்சங்கள் இடம்பெற்றன. இரு தரப்பு போர் நிறுத்தம், கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு, ஈரான் மீதான தடைகள் நீக்கம் உட்பட 14 அம்சங்கள் அமைதி ஒப்பந்தத்தில் இடம்பெற்றன.




















